Saturday, September 16, 2017

"There are no children here" by Alex Kotlowitz.


இந்தப் புத்தகத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். அதன் தாக்கம் இன்றும் குறையவில்லை. சிகாகோவின் அரசு குடியிருப்பில் வாழும் இரண்டு சிறுவர்களின் அன்றாட வாழ்க்கையை துல்லியமாக பதிவு செய்கிறார் அலெக்ஸ்.  பரோவா (Pharoah), லபெயட் (Lafeyette) தினமும் எதிர்கொள்ளும் எண்ணிப்பார்க்க முடியாத வன்முறைகள் நெஞ்சை உலுக்குகின்றன.  அவர்களின் இரண்டு வருட வாழ்க்கையை நாட்குறிப்புகளினூடே எந்தவித சமரசமும் இல்லாமல் உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.  

அவர்கள் உலகம் முற்றிலும் வேறுபட்டது.  நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நரகம். சிகாகோ போன்ற பெரு நகரங்களின் அகநகரங்கள் (inner cities) பெரும்பாலும் தொழிற்சாலைகளற்று, வேலைவாய்ப்புகள் இன்றி ஏழ்மையில் தத்தளிக்கின்றன.  அத்தகைய சூழலில் வாழும் இவர்களுக்கு சிறுவர்களாக இருக்கவும் வாழவும் வாய்ப்பே இல்லை.  சக நண்பர்களின் மரண ஓலங்களுக்கிடையே படிப்பதும், விளையாடுவதும் எப்படிச்  சாத்தியம்.  இது ஊடகங்கள் வெளியே காட்டாத இன்னொரு உலகம், இன்னொரு அமெரிக்கா. இந்தப் புத்தகம் ஊடகவியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.  அனைத்து நாடுகளிலும் அகநகரங்கள் இந்த நிலையைத் தான் எதிர் கொள்ள நேரிடுமோ என்று நினைத்தால் பதைபதைக்கிறது.  

மேற்கோள்கள்

Thursday, July 27, 2017

மீசை..


மீசை அவரது அடையாளம் மட்டுமல்ல அவரது பெயரும் கூட.
அவரை எப்பொழுது முதலில் சந்தித்தேன் என்று ஞாபகம் இல்லை.  நினைவாற்றல் வரும் முன்பே அறிமுகம் என்று நினைக்கிறேன்.  மீசைக்கு எவ்வளவு வயது என்று என்னால் இன்றும் யூகிக்க முடியவில்லை. சுமார் எழுபது வயதுடைய தோற்றம்.  அவருக்கு  பூ விழுந்த கண்கள், வெற்றிலைச் சிவப்பான வாய்.  எஞ்சிய பற்கள் அனைத்தும் கரை படிந்து மஞ்சள் சிவப்பு வர்ணம் பூசியவை.  வெற்றிலை பாக்குப் பை இடுப்பில் எப்பொழுதும் உண்டு.  அதை நிரப்பி வைத்திருக்கவே அவர் பாடுபடுவதாக தோன்றும்.



அவர் எங்கள் நகரில் உள்ள பல வீடுகளில் குப்பை அள்ளுவதும், பாத்தி கட்டுவதும் , செடிகளை நடுவதும் போன்ற துப்புறவு வேலைகளை செய்து வந்தார்.  அவரது மனைவி மங்கி சாணி மொழுகுவது, வீடு பெருக்குவது, வாசல் தெளிப்பது போன்ற பணிகளை செய்து வந்தார்.  என் பாட்டி அவர்கள் இருவரையும் எங்கள் வீட்டின் அங்கமாக நடத்தினார்.

அவர்களது உடைமைகள் எங்கள் வீட்டின் மாடிப்படிகளின் அடியில் இருக்கும்.
ஒரு பழைய தழும்புகள் விழுந்த ரப்பர் செருப்பு, பழுப்பு நிறத்தில் ஒரு பை, சோறும் கஞ்சியும் ஏந்த தோதான ஒரு பாத்திரம் மற்றும் தண்ணீர் குடிக்க ஒரு ஒடுங்கிய பிளாஸ்டிக் குடுவை.   இவ்வளவு தான் அவர்களின் தேவை.  காலையிலேயே இருவரும் வந்து விடுவார்கள்.  எங்கள் நகரை அடைய தினமும் நான்கு கிலோமீட்டர்கள் நடந்து வருவார்கள்.

மீசையின் சொத்து ஒரு கடப்பாரையும் ஒரு மண்வெட்டியும் தான்.  எங்கள் வீட்டின் தென்னை மரங்களை சீவி சிங்காரித்து அழகு படுத்துவார்.  சப்போட்டா மரத்திற்கு இயற்கை உரம் கொண்டு வந்து போடுவார்.  சப்போட்டா பழங்களை திங்க எங்களுக்கும் வவ்வால்களுக்கும் போட்டியே நடக்கும்.  அவ்வளவு இனிமை.  நாள் முழுக்க அசரா நோவும் உழைப்பு.

வீட்டில் நிறைய பூனைகளையும் நாய்களையும் வளர்த்து வந்தோம்.  துரதிர்ஷ்டவசமாக அவற்றில் சில இறக்கும் பொழுது மீசையை தான் அழைப்போம்.  அவர் வந்து அவற்றை ஒரு சாக்குபையில் போட்டு காட்டுக்குள் சென்று அடக்கம் செய்வார்.  வேலையை முடித்த பின்னர் காசுக்காக வீட்டின் வாசலிலேயே மெளனமாக நின்று கிடப்பார்.  நான் சில சமையங்களில் கவனித்து அப்பாவிடம் கூறுவேன்.  காசை குனிந்து இரு கரங்களில் பெற்றுக்கொள்வார்.

 அவரது செருப்புகள் என்றுமே அவருடைய கால்களை விடப் பெரியதாக தான் இருக்கும்.  மங்கி அவரது இரண்டாம் மனைவி.  அவர்களுக்குள் என்றுமே ஒரு எரிச்சல் கலந்த அன்பு மொய்த்துக்கொண்டே இருக்கும்.  "யோவ் மீசை.  யோவ் மீச.  காதும் கேக்காது.   இந்தா  சோறு.  சோறு சோறு  தின்னு." என்று மங்கி கத்தி அழைக்க மீசை குந்தி சோற்றை மீசையில் ஓட்ட தின்பார்.

மதியம் சில வேளைகளில் களைப்பாற வீட்டின் முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பார்கள்.  நான் சில சமயங்களில் இவர்கள் என்னடா எங்கள் தொலைக்காட்சியை பார்ப்பது என்று மறைத்தோ அணைத்தோ விட்டிருக்கிறேன்.  அதை நினைத்தால் வெட்கிப்போகிறேன்.  வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்சென்றுவிட்டேன்.  அவ்வப்பொழுது வீடு வரும் பொழுது மீசையை காண்பதுண்டு.  கூன் விழுந்து உயரம் குறைந்து கொண்டே வந்தது.  ஆனாலும் அதே வேலைப்பழு அதே கூலி.  ஒரு முறை கூட குறை கூறியது நினைவில்லை.  என்னைக் காணும் பொழுது "சாமி நல்ல இருக்கீங்களா?" என்று நான் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்பார்.

கடைசியாக அவரை என்று பார்த்தேன் என்று நினைவில்லை.  "போய்ட்டு வாரொமுங்க" என்று கூறி விடை பெற்று செல்வார்.  இப்பொழுது அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.  அவருக்குரிய மதிப்பையும் மரியாதையும்  நானோ சமுதாயமோ  அளிக்கவில்லை.  பெரிய மீசைக்காரர்களை பார்க்கும் பொழுதெல்லாம் அவர் ஞாபகம்.

நவம்பர் மாதத்தில் மோவெம்பருக்காக (Movember) ஒவ்வொரு ஆண்டும் மீசை வளர்க்கிறேன், ஆண்கள் ஆரோக்கிய  விழிப்புணர்வுக்காக அல்ல, மீசைக்காக. 

Friday, October 16, 2015

அமெரிக்காவில் ஒரு நாள்

சாதத்துடன்  சேர்த்து பொறுமையையும் கட்டிக்கொண்டு அலுவலகம் செல்ல தயாரானான்.  ஐ போட் வாயில் கேட்பொறியை சொருகி காதில் மாட்டிக்கொண்டான்.  சத்தத்தை கூடுமானவரை கூட்டினான் .  உலகம் நிசப்தம் ஆனது.  ஜெர்சி சிட்டி நியூபோர்ட் பாத் (PATH) ரயில் நிலையத்தை அடைந்தான்.  நியூயார்க் செல்லும் ரயில் வந்ததும் நெரிசலில் உள்ளே  சென்று சொருகிக்கொண்டான்.  என். பி. ஆர். உடைய ஆஸ்க் மீ அனதர் பொட்காஸ்ட் ஒலித்துக்கொண்டிருந்தது.  ரயில் மீன் போல ஹட்சன் நதிக்கடியில் நீந்தி நியூ யார்க்கை அடைந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ரயிலின் பாரம் குறைந்து கொண்டு இருந்தது.  மன்ஹட்டனின் 33ஆம் தெரு நிறுத்தம் வந்தவுடன் பாதளத்தில் இருந்து வெளி உலகிற்கு வரிசையில் நின்று படிகளை கடந்து வந்தான்.  வெளி எங்கிலும் மக்கள் வெள்ளம்.  ஹெரல்ட் சதுக்கம் முழுவதும் சுற்றுலா பயணிகள்.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் செல்லும் கூட்டம், மேசிஸ் மற்றும் இன்ன பிற கடைகளில் தள்ளுபடியில் வாங்கிக்கொண்டே இருக்கும் பெரும் கூட்டம்.  காலணி, காதணி, கழுத்தணி என அனைத்து அணிகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து எறும்புகள் போல தூக்கிக்கொண்டு நடந்து கொண்டே இருந்தார்கள்.  நாளை உலகம் அழியும் என்றாலும் இன்று தள்ளுபடியில் பொருட்கள் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்.  34ஆவது வீதியில் திரும்பி பார்க் அவென்யு நோக்கி பாம்பு போல நெளிந்து நடந்து ஓடினான். தினமும் காலையில் அவன் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம்  நடக்கும்.  புயலடித்தாலும் அந்த கூட்டத்திற்கு வந்துவிட வேண்டும்.  இல்லையென்றால் அவனது நிர்வாகி வேலையை விட்டு நிறுத்தவும் தயங்க மாட்டான்.


எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திற்கு அருகில் சுற்றுலா பயணிகளை வளைத்து போடும் நபர்கள் நின்று "எம்பயர் ஸ்டேட்  மேலே செல்ல வேண்டுமா?" என்று கூவிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களை கண்டுகொள்ளாமல் தாண்டி பார்க் அவென்யு வந்தடைந்தான்.  அலுவலக கட்டிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதி பெற மின் அட்டையை ஒரு சிறிய கருவி முன் நீட்டினான்.  அது அதன் மொழியில் பீப் என்று உள்ளே போக அனுமதி அளித்தது.  மின் தூக்கியின் உள்ளே சென்று 27 அருகில் உள்ள பொத்தானை அழுத்தினான்.  மின்தூக்கியில் பொருத்தி இருந்த கண்ணாடியில்  தலைமயிரை சரி பார்த்தான்.  27ஆவது மாடியில் இறங்கி நேராக ஆலோசனை கூட்டத்திற்குள் நுழைந்தான்.  வழக்கம் போல் கடைசி இருக்கையில் அமர்ந்து மறைந்தான்.  கைப்பேசியை தேய்த்து தேய்த்து அன்றைய செய்திகளை ப்ரீஃபிரன்டல் கார்டெக்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது கீழே சாலையில் இருந்து தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளின் ஒலி காதை கிழித்தது.  வழக்கத்துக்கும் அதிகமாகவே ஒலிக்க அவன் மற்றும் இன்னும் சில பேர் கீழே நோக்கினார்கள்.  சாலை முற்றிலுமாக வெறிச்சோடிக் கிடந்தது.  சில காவல் துறையினர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள்.  அவன் உடனே ட்விட்டரை தட்டி விட்டு "34ஆம் சாலை நியூயார்க்" என்று தேடினான்.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அருகே துப்பாக்கிச்சூடு என்று பத்து பதினைந்து ட்வீட் தென்பட்டது.  "மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு" என்று ஒருவர் விவரிக்க அனைவருமே ஒரு நிமிடம் வருத்தப்பட்டு தலை அசைத்து, கைகளை மேலே உயர்த்தி கீழே போட்டார்கள்.  நிர்வாகி "என்ன செய்வது?" என்று கூறிவிட்டு அன்றைய அலுவலக பிரச்சனைகளை பற்றி ஆலோசிக்கத் தொடங்கினான்.

சிறிது நேரத்தில் கூட்டம் முடிந்ததும் அருகில் உள்ள டன்கின் டோனட்ஸ் (Dunkin Donuts) செல்ல கீழிறங்கி வந்தான்.  வெளியே அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தது.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அருகே எச்சரிக்கை என்று முத்திரை இடப்பட்ட மஞ்சள் பட்டைகளை கட்டியிருந்தார்கள்.  செய்திகளில் பொது மக்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் கூறினார்கள்.  சம்பவம் காலை 9:03 க்கு நடந்தது.  அவன் 9 மணி அளவில் தான் அந்த இடத்தை கடந்துசென்றிருந்தான்.  அதை நினைத்து சற்று பீதி அடைந்தான்.  மூன்று நிமிடம் தாமதித்திருந்தால்.. மீண்டும் அலுவலகம் சென்றான்.  அனைத்தும் வழக்கம் போல ஓடிக்கொண்டிருந்தது.  அன்றைய வேலையில் மூழ்கி முத்தெடுத்து சோர்வடைந்து ஆறு மணிக்கு விடை பெற்று வீடு திரும்ப எத்தனித்தான்.  தன் மனைவிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க வேண்டும் என்று மூளை நினைவுறுத்தியது.  ரயில் நிலையம் செல்லும் முன்பு மேசிஸ் சென்றான்.  தள்ளுபடியில் இரண்டு காதணிகளை வாங்கிக்கொண்டு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை பார்த்துக்கொண்டே நடந்தான்.

"This America, man"


Tuesday, September 22, 2015

பச்ச கிளி

என்னடா நான் வளத்த கிளிய பத்தி பேச போறன்னு நெனக்கறீங்கள? நெனசுக்கொங்க நெனசுக்கொங்க. நான் கிளியே வளக்கலியே..
நான் சொல்ல வர்றது எங்க மாமாவோட பஜாஜ் சேடக் ஸ்கூட்டரப் பத்தி. எனக்கு ஒரு பதினேழு வயசு இருக்கும். அப்போ தாத்தாவோட டிவிஎஸ் பிப்டி மட்டும் தான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். அதுவும் நேரா மட்டும் தான் போக தெரியும். இடப்பக்கம் வலப்பக்கம் கூட திருப்ப தெரியாது. வண்டிய திருப்பனும்னா நிறுத்தி எறங்கி திருப்பி மறுபடியும் ஒதைச்சு கெளப்பிக்கிட்டு போவேன். வண்டிய ஒதைக்கும் போது சில சமயம் சைலன்சர்ல சூடு கூட பட்டிருக்கு. அது அப்டியே தடிப்பா புஸ்ஸுன்னு ஆய்டும். ஆன நேரா வேகமா போகும் போது ஏதோ ஒரு போதையா இருக்கும். அதுவும் தாத்தாவுக்கு தெரியாம எடுத்து ஓட்டினா இன்னும் அப்டியே தலைக்கு ஏறிடும். 


எனக்கு பதினெட்டு வயசு நெருங்கும் போது அப்பா மாமா கிட்ட கியர் வண்டி கத்துக்க சொன்னாரு. நானும் ஆழந் தெரியாத கிறுக்குத் தனத்துல மாமா வீட்டுக்கு போனன்.  அப்போ தான் ரொம்ப நாள் கழிச்சு  திரும்ப பச்ச கிளிய பாத்தேன்.  அது எவளோ பெரிய கில்லாடி தெரியுமா.. ஒரு தடவ அது காணாம பறந்து போய்டுச்சு.. எங்க மாமா அதுனால சந்தோச பட்டாரா  இல்ல வருத்த  பட்டாரானு இன்ன வரைக்கும் தெரில.. ஆனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அந்த கலர்ல திரும்ப இன்னொரு வண்டிய நான் எப்போ பாப்பேன் .. நீங்களே சொல்லுங்க.. ஆனா ரெண்டு நாள்ல யாரோ வீட்டுக்கே வந்து உங்க வண்டி ஒரு பொதருக்குள்ள கெடக்குதுனு சொன்னங்க.. மாமாவும் வேற வழி இல்லாம திரும்ப எடுத்துட்டு வந்துட்டாரு.. அப்பறம் கொஞ்ச வருசத்துல வேற ஒரு பெரிய வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கிட்டாரு மாமா.. அது நாள்ல இருந்து கிளிய கூண்டுல அடைச்சுட்டாரு..அப்பறோம் தான் எனக்கு சொல்லிக்குடுக்க ஒரு நாள் கிளிய வெளிய எடுத்தாரு.. பச்ச கிளிக்கு வயசே ஆகல ஆகாது..

மாமா அதுல எப்டி கியர் போடறதுன்னு சொல்லி கொடுத்தாரு..  அப்பறம் தெனமும் ஒரு மணி நேரம் அதுல சவாரி செஞ்சு ஒரு அளவு பழகிட்டேன்..  மாமாவும் அத  கொஞ்ச நாள் என்னையே வெச்சுக்க சொன்னாரு..  அன்னில இருந்து எனக்கு தூங்கற நேரம் தவற மத்த எல்லா நேரமும் அதோட தான்..  கொஞ்சம் கொஞ்சமா வண்டிய மெயின் ரோட்ல ஓட்ட ஆரம்பிச்சேன்.. அடிக்கடி கொஞ்ச தூரம் போக போக கிளி சோர்ந்து போய் தூங்கிடும்.. அப்பறம் அது கிட்ட கெஞ்சி  படுக்க வெச்சு மிதிச்சா எழுந்திரிச்சுக்கும்..  கொஞ்ச நம்பிக்கை வந்தவுடனே மத்தவங்களுக்கு லிப்ட் கூட குடுக்க ஆரம்பிச்சேன்னா பாத்துக்கோங்க.. மொத மொதலா ஒருத்தன ஏத்திகிட்டு  எறக்கி  விட்ற வரைக்கும் தைரியமா நடிச்சது மறக்க முடியுமா சொல்லுங்க..

அப்போ நான் மொத தடவ கிட்டார் கத்துக்க முயற்சி பண்ண காலம்.. பின்னாடி கிட்டார மாட்டிக்கிட்டு பச்ச கிளில ஒரு ரௌண்டு வந்தேன்ன எல்லா பொண்ணுங்களும் நம்மளையே பாப்பாங்கன்னு நெனச்சுட்டு இருந்தேன்.. அப்பறமா சில வருஷம் கழிச்சு அம்மா நான்  வலம் வரும் காட்சிய வர்ணிச்சு சிரிச்சாங்க.. ஊரே கை கொட்டி சிரிச்சிருக்கும்.. இதுல என்னன்னா பச்ச கிளிக்கு இன்சூரன்ஸ் இல்ல, வரி கட்டல.. ஆனா அத பத்தியெல்லாம் எனக்கு கவலையே இல்லாம கிளிய பறக்க விட்டேன்..

ஒரு தடவ தங்கச்சிய பரிச்சைக்கு கொண்டு போய் விட போய்ட்டு இருந்தங்க.. திடிர்னு நம்ம தண்ணீர் பந்தல் வளைவுக்கு முன்னாடி தாகம் எடுததான்னு தெரில கிளி நின்னுடுச்சு.. பரிச்சைக்கு நேரம் வேற ஆகிட்டே இருக்கு.. என்ன என்னமோ பண்ணி பாத்தேங்க.. ஊஹும்.. அப்பறம் அந்த நேரம் பாத்து ஒரு அம்மா அதிர்ஷ்டவசமா  டீ வீ எஸ் எக்செல் சூப்பர்ல வந்தாங்க.. அவங்க உதவி பண்ணி தங்கச்சிய பரிட்சைக்கு சரியான நேரத்துல கொண்டு போய் விட்டாங்க.. அதுக்கு அப்பறம் தங்கச்சி பஸ்லயே தான் பள்ளிக்கூடத்துக்கு போனா..


உலகம் போன போக்குல நானும் இப்போ வெளிநாட்டுல வந்து எல்லாத்தையுமே மறந்துட்டு வெக்கமே இல்லாம ஆடம்பரமா இருக்கறேங்க.. இப்போ எந்த கார் வேணாலும் வாடகைக்கு எடுத்து ஓட்டலாம், ட்டிருக்கேன்.. இருந்தாலும் பச்ச கிளி தாங்க மனசுல நிக்குது.. ரொம்ப நாள் களிச்சு மாமா கிட்ட பேசினேன்.. அப்போ வண்டிய ஒருத்தர்க்கு சும்மா குடுதுட்டேன்னு சொன்னாரு.. பின்ன யாருங்க காசு குடுத்து வாங்குவா?.. நான் வாங்குவேங்க..





Saturday, December 24, 2011

என் முதல் வளர்ப்பு...

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். ஒரு கோடை விடுமுறை தினத்தில் வழக்கம் போல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அன்று தான் என் உயிராகப் போகவிருக்கும் என் அருமை பூனைக்குட்டியை முதன் முதலில் கண்டேன். மைதானத்திற்கு பக்கத்தில் இருக்கும் கூட்டுறவு விற்பனை நிலையம் அருகே தான் அவன் சுற்றிக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் கண் திறந்திருந்தான். தாயையும் சகோதர சகோதரிகளையும் காணவில்லை. தனியாக சுற்றிக்கொண்டிருந்தான். எதிர் வீட்டு கிருஷ்ணா தான் முதலில் அவனை எடுத்தான். சற்று நேரம் அவனோடு விளையாடினோம். சாம்பல் நிறத்தில் கறுப்பு திட்டுகளுடன் சிமெண்ட் ஜல்லி கலவை போல அழகாய் இருந்தான். உடன் விளையாடிய நண்பர்கள் அனைவரும் பூனையை இப்படியே விட்டு விட்டால் இறந்து விடும் என்று கூறினார்கள். கழுகோ, காக்கையோ கொத்தி விடும் என்றார்கள். எனக்கும் கிருஷ்ணாவிற்கும் அவனை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. குட்டியை கிருஷ்ணாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்றோம்.. தொட்டாங்குச்சியில் பால் கொடுத்தோம். சிறிது நேரம் விளையாடினோம். கிருஷ்ணாவின் வீட்டில் பூனையை வைத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.



நான் எடுத்துக்கொள்கிறேன் என்று தைரியமாக என் வீட்டிற்க்கு அவனை எடுத்து வந்து விட்டேன். என் அப்பாவிற்கு மிருகங்களை அவ்வளவாக பிடிக்காது. அம்மாவிற்கு மிருங்கங்களின் மீது கொள்ளை பிரியம். அதுவும் பூனை என்றால் சொல்லவே வேண்டாம்.. நாள் முழுக்க அதனுடனே இருப்பார்கள். அப்பொழுது நான், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்று கூட்டுக் குடும்பமாக இருந்தோம். பாட்டியுடன் தான் அதிக நேரம் செலவளித்தேன். பாட்டி என்றுமே என்னை திட்டியது இல்லை. அவர்களிடம் தான் முதலில் பூனையை காட்டினேன்.. பால் வைத்தார்கள்.. அவனுடன் கயிரை வைத்து விளையாடினார்கள்.. அவனுக்கு ஏனோ நாங்கள் பெயர் வைக்கவே இல்லை. அவன் வந்த பிறகு எனது மற்ற வேலைகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டேன். வீட்டுப் பாடங்களை கட கடவென எழுதி விட்டு அவனுடன் விளையாடிக் கொண்டே இருந்தேன். உறங்கும் பொழுதும் என்னுடன் படுக்க வைத்துக் கொள்வேன். எனக்கு அருகில் அவனை படுக்க வைப்பேன். காலையில் பார்த்தல் என் கால்களுக்கு இடையில் போர்வை மேலே சொகுசாக படுத்துக்கொண்டிருப்பான். கொஞ்சம் புரண்டாலும் செல்லமாக கடிப்பான். அவன் தாய் இல்லாமல் வளர்ந்ததால் அவன் கற்றுக்கொண்டது அனைத்துமே எங்களை பார்த்துத் தான். கழிவறையில் தான் கடன் கழிப்பான். தலையணையில் தலையை மட்டும் வைத்து மனிதர்களைப் போலவே உறங்குவான். என் கால்களை உரசிக்கொண்டே கவனம் கேட்பான். ஒரு நாளும் பால் திருட மாட்டான். அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

சில சமையங்களில் மரம் ஏறி கீழே இறங்க முடியாமல் தவிப்பான். நானும் தங்கையும் சில குரங்கு வேலைகள் செய்து அவனை இறக்கி விடுவோம். எந்த நேரமும் அவனை நாங்கள் யாரவது ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருப்போம். தெருவில் நாய்கள் நடமாட்டமும் அதிகம் இருந்ததால் வீட்டின் கேட்டிற்கு நானும் அம்மாவும் கம்பி கட்டி தடுப்பு அமைத்தோம்.
அதுவும் என் எதிர் வீட்டில் நாய்கள் வளர்த்தி, பயிற்சி அளித்து விற்பனை செய்து வந்தார்கள் இரண்டு சகோதரர்கள். அவர்கள் வீட்டிலும் நிறைய நேரம் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். அவர்கள் மூலம் தான் நாய்களின் பல ஜாதிகளை அறிந்து கொண்டேன். ஸ்டெபி என்று ஒரு லப்ரடோர் ரெட்ரீவர் (Labrador Retriever) இருந்தாள். சகோதரர்கள் இருவருக்கும் ஸ்டெபி க்ராப்ப் மீது கொள்ளை பிரியம். அது தான் பெயர் காரணம். அவளுடன் ஆவலுடன் நாங்கள் அனைவரும் விளையாடுவோம். இப்பொழுதெல்லாம் பூனை மீது தான் கவனம். ஸ்டெபியை மறந்தே விட்டேன்.

அன்றும் வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை பூனையுடன் விளையாட ஆவலாய் ஓடி வந்தேன். வந்ததும் பாட்டி தேநீர் மற்றும் மேரீ பிஸ்கட்டுடன் காத்திருந்தார்கள். பூனை எங்கே என்று கேட்டேன். அது இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கும் என்றும், முதலில் சாப்பிடுமாறும் கூறினார்கள். மாலை சிற்றுண்டியை சுவைத்து விட்டு பூனையை தேடி புஸி புஸி என்று வீடு முழுக்க கூவிக்கொண்டே ஓடினேன். அவனை காணவில்லை. ஒவ்வொரு அறையையும் அலசி ஆராய்ந்தும் அவன் கிடைக்கவில்லை. ஒரு வேளை மரத்தின் மேல் ஏறி இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பானோ என்று எண்ணி மரங்களின் மீது ஏறித் தேடினேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே அழுகையாய் வந்தது. சிறிது நேரம் கழித்து தான் பாட்டி விஷயத்தை உடைத்தார்கள். நான் பள்ளிக்கு சென்றதும் அப்பா பூனையை ஒரு பையில் போட்டுக்கொண்டு போய் பத்து கிலோமிட்டர்களுக்கு அப்பால் விட்டு விட்டு வந்துவிட்டார் என்று கூறினார்கள். நான் செய்வது அறியாது தவித்தேன். அப்பா என்றால் எனக்கு பயம். அப்பாவிடம் ஏன் என்று கேட்க துணிவு இல்லை. வயிற்றில் ஒரு முடிச்சு விழுந்தது போன்ற உணர்வு. என் பிரியமான ஜியோமெட்ரி பாக்ஸை ஒரு முறை தொலைத்த பொழுது ஏற்பட்ட அதே முடிச்சு. அவன் என் முதல் வளர்ப்பு. மனது பாரமாக இருந்தது.

இரண்டு நாட்கள் மிகவும் துயரத்தில் இருந்தேன். பின்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் காலை எழுந்து பால் வாங்க வெளியே சென்றேன். அப்பொழுது தான் எதிர் வீட்டுச் சகோதர்களின் அம்மா என்னை கூப்பிட்டார்கள். நான் அவர்கள் வீட்டிற்குள்ளே நுழைந்து கண்ட காட்சியை இன்றும் மறக்க முடியாது. என் அருமை பூனை அங்கு எனக்காக காத்திருந்தான். "காலைல ஸ்டெபி ரொம்ப குரைச்சா. போய் பாத்த இது செவுத்து மேல உக்காந்திருக்கு. அப்பறம் தான் உன் பூனை மாதிரி இருக்கேன்னு இங்க புடிச்சு வெச்சிருந்தேன்." என்றார்கள். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஸ்டெபி மீண்டும் குரைத்தாள். அவனை தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன்.

பாட்டியிடம் எடுத்துச் சென்றேன். "டேய் இவன் கில்லாடி பூனை டா. மரம் ஏற தெரியலனாலும், எவளோ நாய்கள் கிட்ட இருந்து தப்பிச்சு, நாய் விக்கறவங்க வீட்டுக்கே வந்திருக்கான் பாரு." என்று துணியால் அவனை துடைத்து விட்டுப் பால் வைத்தார்கள். அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. காலை நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அப்பாவிற்கு நான் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி. "என்னடா ஸ்கூலுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க. போய் தயார் ஆகு" என்றார். நான் ஏக்கத்துடன் பூனையை பார்த்தேன். அவனும் முழித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்த அம்மாவிடம், "இனிமேல கூடுதலா கால் லிட்டர் பால் வாங்கிக்கலாம்." என்று புன்னகைத்தார் அப்பா.

Sunday, June 19, 2011

நேர்க்காணல் அனுபவங்கள்

சில வாரங்களாக வேலை தேடும் படலத்தில் இருக்கிறேன்.. மென்பொருள் பொறியாளர் வேலைக்கு தான்.. வேறு எதற்கு???.. இது வரை ஏமாற்றமே.. எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று எண்ணிய பொழுது தோன்றிய கற்பனை இதோ...



பைனரி டிரீயின் (Binary Tree) மேல் ஏறினேன்
போதாது என்றார்கள்
வேர் (root) வரை சென்றேன்
வெட்டி விட்டார்கள்

லிங்க் லிஸ்டை (Link list) சுற்ற சொன்னார்கள்
தலை (head) முதல் வால் (tail) வரை
கிறு கிறுக்க சுற்றினேன்
மாத்திரை குடுத்து அனுப்பிவிட்டார்கள்

ஜாவா (java) கோடை (code) அலங்கரிக்க (decorator pattern) சொன்னார்கள்
பாண்ட்டை (font) மாற்றி அழகாக்கினேன்
டிசய்ன் பாட்டர்ன் (Design pattern) தெரியாதா என்று
தலையில் அடித்து தள்ளி விட்டார்கள்

ட்ரை (Trie) பண்ண சொன்னார்கள்
கேள்வியை கேளுங்கள் ட்ரை (try) பண்ணுகிறேன் என்றேன்
காதைத் திறுகி
கதவை மூடி விட்டார்கள்

உலகம் சுற்ற குறுக்கு வழி கேட்டார்கள் (Travelling Salesman Problem)
நான் அவர்களை சுற்றி
நீங்கள் தான் உலகம் என்றேன்
மாம்பழம் கூட கொடுக்காமல் துரத்தி விட்டார்கள்

என்ன உலகமடா இது??

Thursday, August 12, 2010

நூற்றுக்கு பூஜ்யம்...



கிட்டாரிலே சாத்தான்கள்
மனதிலே கரையான்கள்
விரல்களிலே தயக்கம்..
முன்னேற்றம், அது பின்னோக்கி..

ராகம் தெரியாமலே பாடல் எழுதுகிறேன்..
பாடலின் அமைப்பும் அறியாமலே..
பாதை இல்லா திசையிலே பயணிக்கிறேன் ..
ஒரு வைரமேனும் கிட்டுமோ?...
இல்லை வழிப்பறி தான் மிஞ்சுமோ?

கரையிலேயே தத்தளித்தால்..
ஆழ் கடல் செல்வதெப்போது?
வேட்டை ஆடாமல் பிழைக்க முடியுமா
இந்த அமேசான் காட்டிற்குள்ளே...

விண்வெளி செல்ல விடுமுறை வேண்டுமே..
யாரிடம் விண்ணப்பிப்பது?
நடனம் தான் ஆடுகிறேன்..
ஒரு அணுவும் வியக்கவில்லையே?

கிட்டாரிலே சாத்தான்கள்
மனதிலே கரையான்கள்
விரல்களிலே தயக்கம்..
முன்னேற்றம், அது பின்னோக்கி..