Friday, October 16, 2015

அமெரிக்காவில் ஒரு நாள்

சாதத்துடன்  சேர்த்து பொறுமையையும் கட்டிக்கொண்டு அலுவலகம் செல்ல தயாரானான்.  ஐ போட் வாயில் கேட்பொறியை சொருகி காதில் மாட்டிக்கொண்டான்.  சத்தத்தை கூடுமானவரை கூட்டினான் .  உலகம் நிசப்தம் ஆனது.  ஜெர்சி சிட்டி நியூபோர்ட் பாத் (PATH) ரயில் நிலையத்தை அடைந்தான்.  நியூயார்க் செல்லும் ரயில் வந்ததும் நெரிசலில் உள்ளே  சென்று சொருகிக்கொண்டான்.  என். பி. ஆர். உடைய ஆஸ்க் மீ அனதர் பொட்காஸ்ட் ஒலித்துக்கொண்டிருந்தது.  ரயில் மீன் போல ஹட்சன் நதிக்கடியில் நீந்தி நியூ யார்க்கை அடைந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ரயிலின் பாரம் குறைந்து கொண்டு இருந்தது.  மன்ஹட்டனின் 33ஆம் தெரு நிறுத்தம் வந்தவுடன் பாதளத்தில் இருந்து வெளி உலகிற்கு வரிசையில் நின்று படிகளை கடந்து வந்தான்.  வெளி எங்கிலும் மக்கள் வெள்ளம்.  ஹெரல்ட் சதுக்கம் முழுவதும் சுற்றுலா பயணிகள்.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் செல்லும் கூட்டம், மேசிஸ் மற்றும் இன்ன பிற கடைகளில் தள்ளுபடியில் வாங்கிக்கொண்டே இருக்கும் பெரும் கூட்டம்.  காலணி, காதணி, கழுத்தணி என அனைத்து அணிகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து எறும்புகள் போல தூக்கிக்கொண்டு நடந்து கொண்டே இருந்தார்கள்.  நாளை உலகம் அழியும் என்றாலும் இன்று தள்ளுபடியில் பொருட்கள் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்.  34ஆவது வீதியில் திரும்பி பார்க் அவென்யு நோக்கி பாம்பு போல நெளிந்து நடந்து ஓடினான். தினமும் காலையில் அவன் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம்  நடக்கும்.  புயலடித்தாலும் அந்த கூட்டத்திற்கு வந்துவிட வேண்டும்.  இல்லையென்றால் அவனது நிர்வாகி வேலையை விட்டு நிறுத்தவும் தயங்க மாட்டான்.


எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திற்கு அருகில் சுற்றுலா பயணிகளை வளைத்து போடும் நபர்கள் நின்று "எம்பயர் ஸ்டேட்  மேலே செல்ல வேண்டுமா?" என்று கூவிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களை கண்டுகொள்ளாமல் தாண்டி பார்க் அவென்யு வந்தடைந்தான்.  அலுவலக கட்டிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதி பெற மின் அட்டையை ஒரு சிறிய கருவி முன் நீட்டினான்.  அது அதன் மொழியில் பீப் என்று உள்ளே போக அனுமதி அளித்தது.  மின் தூக்கியின் உள்ளே சென்று 27 அருகில் உள்ள பொத்தானை அழுத்தினான்.  மின்தூக்கியில் பொருத்தி இருந்த கண்ணாடியில்  தலைமயிரை சரி பார்த்தான்.  27ஆவது மாடியில் இறங்கி நேராக ஆலோசனை கூட்டத்திற்குள் நுழைந்தான்.  வழக்கம் போல் கடைசி இருக்கையில் அமர்ந்து மறைந்தான்.  கைப்பேசியை தேய்த்து தேய்த்து அன்றைய செய்திகளை ப்ரீஃபிரன்டல் கார்டெக்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது கீழே சாலையில் இருந்து தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளின் ஒலி காதை கிழித்தது.  வழக்கத்துக்கும் அதிகமாகவே ஒலிக்க அவன் மற்றும் இன்னும் சில பேர் கீழே நோக்கினார்கள்.  சாலை முற்றிலுமாக வெறிச்சோடிக் கிடந்தது.  சில காவல் துறையினர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள்.  அவன் உடனே ட்விட்டரை தட்டி விட்டு "34ஆம் சாலை நியூயார்க்" என்று தேடினான்.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அருகே துப்பாக்கிச்சூடு என்று பத்து பதினைந்து ட்வீட் தென்பட்டது.  "மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு" என்று ஒருவர் விவரிக்க அனைவருமே ஒரு நிமிடம் வருத்தப்பட்டு தலை அசைத்து, கைகளை மேலே உயர்த்தி கீழே போட்டார்கள்.  நிர்வாகி "என்ன செய்வது?" என்று கூறிவிட்டு அன்றைய அலுவலக பிரச்சனைகளை பற்றி ஆலோசிக்கத் தொடங்கினான்.

சிறிது நேரத்தில் கூட்டம் முடிந்ததும் அருகில் உள்ள டன்கின் டோனட்ஸ் (Dunkin Donuts) செல்ல கீழிறங்கி வந்தான்.  வெளியே அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தது.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அருகே எச்சரிக்கை என்று முத்திரை இடப்பட்ட மஞ்சள் பட்டைகளை கட்டியிருந்தார்கள்.  செய்திகளில் பொது மக்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் கூறினார்கள்.  சம்பவம் காலை 9:03 க்கு நடந்தது.  அவன் 9 மணி அளவில் தான் அந்த இடத்தை கடந்துசென்றிருந்தான்.  அதை நினைத்து சற்று பீதி அடைந்தான்.  மூன்று நிமிடம் தாமதித்திருந்தால்.. மீண்டும் அலுவலகம் சென்றான்.  அனைத்தும் வழக்கம் போல ஓடிக்கொண்டிருந்தது.  அன்றைய வேலையில் மூழ்கி முத்தெடுத்து சோர்வடைந்து ஆறு மணிக்கு விடை பெற்று வீடு திரும்ப எத்தனித்தான்.  தன் மனைவிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க வேண்டும் என்று மூளை நினைவுறுத்தியது.  ரயில் நிலையம் செல்லும் முன்பு மேசிஸ் சென்றான்.  தள்ளுபடியில் இரண்டு காதணிகளை வாங்கிக்கொண்டு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை பார்த்துக்கொண்டே நடந்தான்.

"This America, man"


Tuesday, September 22, 2015

பச்ச கிளி

என்னடா நான் வளத்த கிளிய பத்தி பேச போறன்னு நெனக்கறீங்கள? நெனசுக்கொங்க நெனசுக்கொங்க. நான் கிளியே வளக்கலியே..
நான் சொல்ல வர்றது எங்க மாமாவோட பஜாஜ் சேடக் ஸ்கூட்டரப் பத்தி. எனக்கு ஒரு பதினேழு வயசு இருக்கும். அப்போ தாத்தாவோட டிவிஎஸ் பிப்டி மட்டும் தான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். அதுவும் நேரா மட்டும் தான் போக தெரியும். இடப்பக்கம் வலப்பக்கம் கூட திருப்ப தெரியாது. வண்டிய திருப்பனும்னா நிறுத்தி எறங்கி திருப்பி மறுபடியும் ஒதைச்சு கெளப்பிக்கிட்டு போவேன். வண்டிய ஒதைக்கும் போது சில சமயம் சைலன்சர்ல சூடு கூட பட்டிருக்கு. அது அப்டியே தடிப்பா புஸ்ஸுன்னு ஆய்டும். ஆன நேரா வேகமா போகும் போது ஏதோ ஒரு போதையா இருக்கும். அதுவும் தாத்தாவுக்கு தெரியாம எடுத்து ஓட்டினா இன்னும் அப்டியே தலைக்கு ஏறிடும். 


எனக்கு பதினெட்டு வயசு நெருங்கும் போது அப்பா மாமா கிட்ட கியர் வண்டி கத்துக்க சொன்னாரு. நானும் ஆழந் தெரியாத கிறுக்குத் தனத்துல மாமா வீட்டுக்கு போனன்.  அப்போ தான் ரொம்ப நாள் கழிச்சு  திரும்ப பச்ச கிளிய பாத்தேன்.  அது எவளோ பெரிய கில்லாடி தெரியுமா.. ஒரு தடவ அது காணாம பறந்து போய்டுச்சு.. எங்க மாமா அதுனால சந்தோச பட்டாரா  இல்ல வருத்த  பட்டாரானு இன்ன வரைக்கும் தெரில.. ஆனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அந்த கலர்ல திரும்ப இன்னொரு வண்டிய நான் எப்போ பாப்பேன் .. நீங்களே சொல்லுங்க.. ஆனா ரெண்டு நாள்ல யாரோ வீட்டுக்கே வந்து உங்க வண்டி ஒரு பொதருக்குள்ள கெடக்குதுனு சொன்னங்க.. மாமாவும் வேற வழி இல்லாம திரும்ப எடுத்துட்டு வந்துட்டாரு.. அப்பறம் கொஞ்ச வருசத்துல வேற ஒரு பெரிய வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கிட்டாரு மாமா.. அது நாள்ல இருந்து கிளிய கூண்டுல அடைச்சுட்டாரு..அப்பறோம் தான் எனக்கு சொல்லிக்குடுக்க ஒரு நாள் கிளிய வெளிய எடுத்தாரு.. பச்ச கிளிக்கு வயசே ஆகல ஆகாது..

மாமா அதுல எப்டி கியர் போடறதுன்னு சொல்லி கொடுத்தாரு..  அப்பறம் தெனமும் ஒரு மணி நேரம் அதுல சவாரி செஞ்சு ஒரு அளவு பழகிட்டேன்..  மாமாவும் அத  கொஞ்ச நாள் என்னையே வெச்சுக்க சொன்னாரு..  அன்னில இருந்து எனக்கு தூங்கற நேரம் தவற மத்த எல்லா நேரமும் அதோட தான்..  கொஞ்சம் கொஞ்சமா வண்டிய மெயின் ரோட்ல ஓட்ட ஆரம்பிச்சேன்.. அடிக்கடி கொஞ்ச தூரம் போக போக கிளி சோர்ந்து போய் தூங்கிடும்.. அப்பறம் அது கிட்ட கெஞ்சி  படுக்க வெச்சு மிதிச்சா எழுந்திரிச்சுக்கும்..  கொஞ்ச நம்பிக்கை வந்தவுடனே மத்தவங்களுக்கு லிப்ட் கூட குடுக்க ஆரம்பிச்சேன்னா பாத்துக்கோங்க.. மொத மொதலா ஒருத்தன ஏத்திகிட்டு  எறக்கி  விட்ற வரைக்கும் தைரியமா நடிச்சது மறக்க முடியுமா சொல்லுங்க..

அப்போ நான் மொத தடவ கிட்டார் கத்துக்க முயற்சி பண்ண காலம்.. பின்னாடி கிட்டார மாட்டிக்கிட்டு பச்ச கிளில ஒரு ரௌண்டு வந்தேன்ன எல்லா பொண்ணுங்களும் நம்மளையே பாப்பாங்கன்னு நெனச்சுட்டு இருந்தேன்.. அப்பறமா சில வருஷம் கழிச்சு அம்மா நான்  வலம் வரும் காட்சிய வர்ணிச்சு சிரிச்சாங்க.. ஊரே கை கொட்டி சிரிச்சிருக்கும்.. இதுல என்னன்னா பச்ச கிளிக்கு இன்சூரன்ஸ் இல்ல, வரி கட்டல.. ஆனா அத பத்தியெல்லாம் எனக்கு கவலையே இல்லாம கிளிய பறக்க விட்டேன்..

ஒரு தடவ தங்கச்சிய பரிச்சைக்கு கொண்டு போய் விட போய்ட்டு இருந்தங்க.. திடிர்னு நம்ம தண்ணீர் பந்தல் வளைவுக்கு முன்னாடி தாகம் எடுததான்னு தெரில கிளி நின்னுடுச்சு.. பரிச்சைக்கு நேரம் வேற ஆகிட்டே இருக்கு.. என்ன என்னமோ பண்ணி பாத்தேங்க.. ஊஹும்.. அப்பறம் அந்த நேரம் பாத்து ஒரு அம்மா அதிர்ஷ்டவசமா  டீ வீ எஸ் எக்செல் சூப்பர்ல வந்தாங்க.. அவங்க உதவி பண்ணி தங்கச்சிய பரிட்சைக்கு சரியான நேரத்துல கொண்டு போய் விட்டாங்க.. அதுக்கு அப்பறம் தங்கச்சி பஸ்லயே தான் பள்ளிக்கூடத்துக்கு போனா..


உலகம் போன போக்குல நானும் இப்போ வெளிநாட்டுல வந்து எல்லாத்தையுமே மறந்துட்டு வெக்கமே இல்லாம ஆடம்பரமா இருக்கறேங்க.. இப்போ எந்த கார் வேணாலும் வாடகைக்கு எடுத்து ஓட்டலாம், ட்டிருக்கேன்.. இருந்தாலும் பச்ச கிளி தாங்க மனசுல நிக்குது.. ரொம்ப நாள் களிச்சு மாமா கிட்ட பேசினேன்.. அப்போ வண்டிய ஒருத்தர்க்கு சும்மா குடுதுட்டேன்னு சொன்னாரு.. பின்ன யாருங்க காசு குடுத்து வாங்குவா?.. நான் வாங்குவேங்க..