Friday, May 28, 2010

பயம்


கிரேஹௌண்ட் (Greyhound), வட அமெரிக்காவின் மிகப் பெரிய போக்குவரத்து நிறுவனம். சுமார் 2300 நகரங்களை இணைக்கும் பேருந்து சேவை அளிக்கும் நிறுவனம். அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல கிரேஹௌண்டை இரண்டு காரணங்களுக்காக தேர்வு செய்தேன். ஒன்று, குறைந்த கட்டணம். இரண்டு, வேறு வழி இல்லை.

பத்து மணிக்கு புறப்படும் பேருந்தை பிடிக்க ஒன்பது மணிக்கெல்லாம் ஆஜர் ஆகும் படி பயணச்சீட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். நேரத்தை கடை பிடிப்பதில் ஜெர்மானியர்களைப் போல இருக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக் கொண்ட கட்டளையின் பேரில் எட்டே முக்காலுக்கு ஆஜர் ஆனேன். பயணச்சீட்டை காண்பித்து போர்டிங் பாஸும் வாங்கி ஆகி விட்டது. பேருந்து புறப்பட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருக்கிறதே என்று கையில் இருந்த 'Surely you are joking Mr. Feynman' புத்தகத்தை ஐந்தாவது முறையாக படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகத்தை முதல் முறை வாசித்த பொழுதே எனது அங்கங்களுக்குள் ஒன்றாகி விட்டிருந்தது. புத்தகங்களை இரவல் குடுக்கும் விஷயத்தில் நான் மகா கஞ்சன். என்னிடம் ஏழைகள் யாரும் இரவல் கேட்பதில்லை. கேட்பவர்கள் அனைவரும் குறைந்தது இருபது ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் கணிப்பொறி கிராக்கிகள் தான்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். மேற்கூறிய கஞ்சத்தனத்தால் தான் இந்த புத்தகம் ஐந்து ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த பொழுது கவனம் சிதறிக் கொண்டே இருந்தது. காரணம் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். மக்களில் தொண்ணூறு சதவிகிதம் ஆப்ரிக்க அமெரிக்கர்கள். இனவாதத்தை அடியோடு வெறுப்பவன் நான். ஆயினும் அவர்களை பார்க்க பார்க்க உள்ளே ஒரு வித பயம் மேலும் கீழும் உருண்டது. உயிர் மேல் ஆசை இருந்தால் கருப்பர்கள் என்ன கேட்டாலும் கொடுத்து விடு என்று நண்பர்கள் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

எனது பயத்தை நினைத்து வெட்கினேன். ஆனால் அந்த உணர்வை அடக்க முடியவில்லை. கட்டுப்படுத்த முடியாத இனவாத உணர்வு. பயணிகள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. அனைவரும் சாதாரண உடை அணிந்திருந்தார்கள். சிலர் மங்கிய உடை அணிந்திருந்தார்கள். அமெரிக்காவில் சாதரணமாக காணப்படும் ஆடம்பரம் அவர்களிடம் இல்லை. நிறைய பேர் புகைப் பிடித்தனர். ஒருவன் நெருப்பு இருக்கிறதா என்று என்னிடம் கேட்டான். நான் இல்லை என்று தலை ஆட்ட முறைத்துக் கொண்டே விலகிச் சென்றான். அனைவரும் கார் இல்லாத ஏழைகள் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டேன்.

ஏன் இவர்களில் நிறைய பேர் ஏழையாக இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுந்தது. அவர்கள் வளரும் சூழல் ஒரு மிகப் பெரிய காரணமோ?. சுற்றிலும் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பின் ஒருவன் படிக்க செல்வது முடியாத காரியம். ஏன் நிறைய பேர் திருடுகிறார்கள்?
'A Scanner Darkly' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் நினைவிற்கு வந்தது.
'சக்கரை வியாதி உள்ள ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் உயிர் வாழ இன்சுலின் வாங்கியே ஆக வேண்டும். அவனிடம் காசு இல்லை என்றால் என்ன செய்வான்? அடுத்தவனிடம் இருந்து பிடுங்கியாவது இன்சுலின் வாங்க நினைப்பான்'.

மறுக்கப் பட்டவர்கள் மடிவார்கள் அல்லது உலகத்திடம் இருந்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆய்த எழுத்து திரைப்படத்தில் இன்பா கூறும் ஒரு வசனம், 'இந்த உலகம் எனக்கு எதுவுமே குடுக்கல. எல்லாமே நானா புடுங்கி எடுத்து கிட்டது தான்.' ஏன் இவர்கள் மறுக்கப் படுகிறார்கள்? இந்த கேள்விக்கு ஓராயிரம் பதில்கள் இருக்கலாம். எனக்கு சரியான காரணம் தெரிய வில்லை.

மணி பத்தாகி விட்டிருந்தது. தோதான இருக்கையாக தேடித் பிடித்து அமர்ந்தேன். புத்தகத்தில் ஆழ்ந்தேன். ஒரு மணி நேரப் பயணத்திற்கு பிறகு பேருந்து ஒரு இடத்தில் நிறுத்தப் பட்டது. அனைவரும் இறங்கிப் போனார்கள் என்னைத் தவிர. என் பையில் மடிக்கணினி மற்றும் உடைகள் வைத்திருந்தேன். அவற்றை விட்டு விட்டு போக மனம் இல்லை. வந்த சிறுநீரை அடக்கிக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம் தான். பின் போய்க் கொள்ளலாம் என்கிற ஆறுதல்.

அப்பொழுது ஒருவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். அவசரமாக ஒருவரை அழைக்க வேண்டும் என்று எனது கைப்பேசியை கேட்டான். வேறு வழி இல்லாமல் எனது கைப்பேசியை கொடுத்தேன். வாங்கியவன் சிக்னல் சரியில்லை என்று கூறி கிழே இறங்கி சென்றுவிட்டான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இறங்கி அவனை பின் தொடரலாமா? பையில் கணினி வேறு இருக்கிறது. அதையும் எடுத்துச் செல்லலாமா? கைப்பேசி போயே போச்சா? ஐயையோ பேருந்தை இப்பொழுது எடுத்து விடுவானே. ஓட்டுனர் கூட வந்தாயிற்றே. இதயம் பட படக்க செய்வதறியாது முழித்தேன். பேருந்தும் எடுத்தாகிவிட்டது. கிளம்பும் வேளையில் ஆசாமி திரும்பி வந்துவிட்டான். நன்றி கூறி கைப்பேசியை திரும்ப கொடுத்து விட்டான்.

அவனை நம்ப மறுத்ததற்காக மனம் வருந்தினேன். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சேருமிடம் வந்தடைந்தேன். மூன்று மணி நேரமாக என் கணினியை வெளியே எடுக்க நினைத்து எடுக்கவே இல்லை. பயந்து பயந்து ஒரு வழியாக வந்தாயிற்று. அழைத்து செல்ல வந்த நண்பன் பயணத்தைப் பற்றி விசாரித்தான். அவனது ஒரு பயம் நிறைந்த கிரேஹௌன்ட் பயணத்தை நினைவு கூர்ந்தான். தனி மரம் அல்ல ஒரு தோப்பே என் உணர்வுகளை பகிர்கிறது போலும். அந்த நிகழ்வுக்கு பிறகு இரண்டு முறை கிரேஹௌண்டில் பயணம் செய்து விட்டேன். ஆயினும் ஆப்ரிக்க அமெரிக்கர்களை கண்டால் ஒரு வித பயம் ஏற்படுவது தொடர்கிறது. அதை உணரும் போதெல்லாம் வெட்கித் தலைகுனிகிறேன். இந்த பயம் கலந்த இனவாத உணர்வை என்னால் வெல்ல முடியாததை நினைத்து வருந்துகிறேன். நிச்சயம் என்னை மாற்றிக்கொள்வேன்.

Sunday, May 23, 2010

இலக்கு ??


சூரியன் உறங்கச் செல்லும் தருவாய். தனியாக அமர்ந்திருந்தான். அமெரிக்காவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மெக்ஸிக்கன் உணவகம் அளித்த நீடிக்காத நிம்மதி அவனை ஆட்கொண்டிருந்தது. புர்ரிடோ பௌல் (Burrito Bowl), வெறும் சாதத்தில் கூட்டை பிசைந்து உண்ணும் பிரம்மையை அவனுக்கு ஏற்படுத்தியது. சைவம் தான் சாப்பிடுவான். மிருக வதைப்பை விரும்பாதவன்.

மொத்தம் உணவகத்தில் அவனைத் தவிர மூன்று பேர் இருந்தனர். ஒரு காதல் ஜோடி, ஆரத் தழுவிக் கொண்டே உணவருந்திக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவன் மனம் ஒரு துணைக்காக சற்று ஏங்கியது. வாழ்க்கையில் துணையுடன் வாழ்வது தனது சுதந்திரத்தை பாதிக்கும் என்று எண்ணி தன்னை சாந்தப்படுத்திக்கொண்டான். ஆனால் நிஜத்தில் தனிமையை வெறுத்தான்.

மனம் எதிர்காலத்தை எண்ணி வருந்தியது. தன்னை அறியாமல் குவளையில் உள்ள பாதி உணவை காலி செய்திருந்தான்.
"அடுத்து என்ன செய்யலாம்."
மெக்டோனல்ட்ஸ் சென்று ஒரு ஷேக் குடிக்கலாம் என்றது அடிமை மனது. மூளையின் ஏதோ ஒரு பகுதி அது கொழுப்பு சத்து நிறைந்தது என்று வலியுறுத்தியது. காதல் ஜோடி இடத்தை காலி பண்ண ஒரு மணி நேரமாவது ஆகும் என்று தேவையில்லாமல் கணித்தது மூளை.

உண்டு முடித்தான். மணி எவ்வளவு என்று தெரியவில்லை. கடிகாரம் அணியும் பழக்கம் இல்லை. பொருள் மீது சிறிதும் ஈடுபாடு கிடையாது. அமெரிக்காவில் அவன் இது வரை ஷாப்பிங் செய்யவில்லை. எதையும் தேவை இருந்தால் ஒழிய வாங்கமாட்டான். அதற்கு சோம்பேறித்தனமும் ஒரு காரணம். கார் இல்லாமல் ஒரு நிமிடம் இருக்க இயலாத இந்தப் பிரதேசத்தில் ஒரு வருடம் கார் இல்லாமல் வாழ்திருந்தான். ஓட்டவும் தெரியாது.

"எவ்வளவு கார்கள். எங்கிருந்து வருகிறது எரிபொருள். இவர்கள் ஒரு தேசமே இவ்வளவு நுகர்ந்தால் மற்றவர்கள் என்ன செய்வது. நமது வருங்கால சந்ததியர் என்ன செய்வார்கள்." இந்தக் கேள்வியை அவன் மனதில் செதுக்கியிருந்தான். காபிடளிசதில் (Capitalism) துளியும் நம்பிக்கை கிடையாது.

இப்பொழுது கோடை விடுமுறை. கல்லூரியில் ஒரு ஈ காக்கா இல்லை.

"கிடார் கிளாஸ் வேறு செல்ல வேண்டும்."
திடீர் என்று ஒரு நாள் கிடார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து சேரவும் செய்திருந்தான். ஆனால் மனதளவில் ஈடுபாடு கிடையாது.

கணிப்பொறியியல் மேற்படிப்பு படிக்கிறான். அதிலும் ஈடுபாடு கிடையாது. வாழ்வில் என்ன வேண்டும் என்று தெரியாத பல கோடி பேரில் ஒருவன். வாழ்வின் அர்த்தம் என்ன என்று நிறைய யோசித்து ஒரு தீர்வும் கிடைக்கவில்லை அவனுக்கு. நிறைய தத்துவ மேதைகளின் கருத்துக்களை அரை குறையாக தெரிந்து வைத்திருந்தான். இறுதியில் வாழ்கைக்கு அர்த்தம் என்று ஒன்று கிடையாது என்று முடிவு செய்திருந்தான்.

"வாழ்கையின் அர்த்தமின்மை தான் மனிதனை வாழ்க்கைக்கு அர்த்தம் தேட வைக்கிறது என்று ஒரு அறிஞர் சொன்னார். அது எவ்வளவு உண்மை."

நாத்திகவாதி. விதி என்று எதுவும் கிடையாது. அனைத்து நிகழ்வுகளும் இலக்கில்லாமல் நேருவதாக நம்புபவன்.

"நான் தேரமாட்டேன். எத்தனை தடைகள் என்னிடம். கூச்ச சுபாவம். புத்தியின்மை. சோம்பேறித்தனம். எதையும் ஒழுங்காக செய்வது கிடையாது. நண்பர்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. கூடிப் பழகும் தன்மை சிறிதும் இல்லை. இருந்த நகைச்சுவை உணர்வும் சுவடே இல்லமால் மறைந்து விட்டது. நான் வாழத் தகுதி இல்லாதவனா?. இந்த உலகம் என்னை விழுங்கிவிடுமா? "

"மனிதன் இவ்வளவு தூரம் உலகை கட்டுக்குள் கொண்டு வர அறிவு தான் காரணம். அறிவைக் கொண்டு மனிதன் பல்வேறு கருவிகளை படைக்கிறான். அவற்றை துல்லியமாக உபயோகிக்கவும் செய்கிறான். நான் கருவிகளை உபயோகிப்பதில் முற்றிலும் சோடை போகிறவன். நான் தற்கொலை செய்து கொண்டால் என்ன? இத்தனை மனப் போராட்டங்களும் தேவைதானா? "

"மாட்டேன். மாட்டேன். தற்கொலை மட்டும் செய்து கொள்ளவே மாட்டேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று கிடையாது. அதெல்லாம் வெறும் கட்டுக்கதை. இறந்தால் அனைத்தும் மறைந்து விடும். மிஞ்சுவது ஒரு வெற்றிடம். இந்த பூமியில் தோன்றுவது எவ்வளவு ஆச்சர்யமான விபத்து. அதை நானே முடித்துக்கொள்வதா? முடியாது. நான் வாழ்ந்தே தீருவேன்."
எவற்றிலும் ஈடுபாடு இல்லாதவனுக்கு ஒன்று மட்டும் இன்பம் அளித்தது. எழுதுவது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் எந்த மொழியின் மீதும் ஆளுமை கிடையாது. தெரிந்த வார்த்தைகளை போட்டு கிறுக்குவான். நிறைய எழுதுவான். ஆனால் யாரிடமும் காண்பிக்க மாட்டான். தாழ்வு மனப்பான்மை தான் காரணம். இப்படியும் ஒருவன் உலகில் இருக்க முடியுமா என்று தனக்கு தானே கேள்வி எழுப்பிக் கொள்வான்.

"நான் எழுதப்போகிறேன். அதனால் பயன் கிடைக்குமோ கிடைக்காதோ நான் எழுதுவேன். யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ நான் எழுதுவேன். எழுத்தாளராக வரவில்லை என்றாலும் பரவாயில்லை நான் எழுதுவேன்."

மடிக்கணினியில் ஸ்டீவ் மில்லரின் டான்ஸ் டான்ஸ் டான்ஸ் பாட்டு ஒலிக்க இந்தக் கதையை எழுதத் தொடங்கினான்.