Tuesday, January 19, 2010

வசந்த காலங்கள்

வேலை வெட்டி இல்லாமல் இருந்த பொழுது எழும்பிய நினைவுகள் தாம் இவை . எனது சிறிய வயது அனுபவங்களின் தொகுப்பு. வாசகர்களை சந்தேகப்பட வைக்கும் சில பல வரிகள் யாவும் கற்பனையே :). 'ஆட்டோகிராஃப்' நினைவுக்கு வருகிறது என்று தாங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. எனக்கு நேர்ந்ததும் சராசரி இந்திய சிறுவனின் அனுபவங்கள் தான்.


இன்பம் துன்பம் மற்றும் பல...

  • ஐந்தாம் வகுப்பில் அடைக்காமல் விட்ட 2 ரூ 50 பைசா தாத்தா பெட்டிக் கடை பாக்கி.
  • முதலும் கடைசியுமாய் அறியாமல் குடித்த கோழி ஸூப்.
  • நண்பனிடம் கேட்டு நிரப்பிய கோடிட்ட இடங்கள்.
  • ஸ்கோர் ஏற்றி வெற்றி பெற்ற கிரிக்கெட் போட்டிகள்.
  • இரவல் வாங்கி உடைத்த நண்பனின் கிரிக்கெட் மட்டை.
  • திருடித் தின்ற தாத்தா கடை தேன் மிட்டாய்கள்.
  • முதல் பேருந்துப் பயணம், பயனச்சீட்டின்றி!.
  • இந்தி வகுப்பு முன் வரும் வலிக்காத தலை வலிகள்.
  • தாளம் போட்டு உடைத்த வகுப்பறை பெஞ்சு.
  • சலூன் கடைத் தூக்கம்.
  • அடுத்த தெரு அனிதாவின் கடைக்கண் பார்வை.
  • 'கெடலை பெறி' அண்ணனின் 'கடலை பொறி'
  • பல்லில்லாமல் பக்கோடா கடிக்கும் தாத்தா.
  • பாட்டி வெடிக்கும் கொள்ளுப் பட்டாசு.
  • கழுகுகளிடம் இருந்து காப்பாற்றிய பூனைக் குட்டிகள்..
  • மாறி மாறி வாங்கிய ஐந்து நாய்க் கடிகள்..

    மேலே கூறியவை நூற்றில் ஒரு பங்கு தான்.. மற்ற அனுபவங்களை தொடர்ந்து எழுதுகிறேன்..

Friday, January 08, 2010

நட்பு

சிங்கபுரி இளவரசன் கோமகனும் புலியூர் இளவரசன் வாமனனும் நீண்ட வாள் பயிற்சிக்குப் பிறகு களைப்பாரிக்கொண்டிருந்தார்கள். இருவரும் பால்ய சிநேகிதர்கள். அத்தருணம் அங்கு சேவகன் செந்தாமரை ஒரு செய்தியுடன் வந்தான்.

"சிங்கபுரி இளவரசர் கோமகனுக்கும், புலியூர் இளவரசர் வாமனனுக்கும் இந்த சிறியவனின் தாழ்மையான வணக்கங்கள்."

"வந்த காரணத்தை கூறும் செந்தாமரையாரே!" என்றான் கோமகன்.

"இளவரசே! தாங்கள் இருவரும் பதினைந்து வயதை இந்த வருடம் கடந்தமையால் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் முதலைக்குளம் சடங்கில் கலந்து கொள்ளுமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள் தங்கள் தந்தையார்கள்."

வாசகர்களுக்காக முதலைக்குளம் சடங்கு பற்றிய ஒரு சிறு குறிப்பு. வருடா வருடம் நடைபெறும் இந்த சடங்கில் நூற்றுக்கணக்கான இளவரசர்கள் கலந்து கொள்வார்கள். பெயருக்கு ஏற்ப முதலைக்குளம் முழுவதும் முதலைகள் நிரம்பி வழியும். இளவரசர்கள் அனைவரும் குளத்தின் ஒரு கரையில் ஒன்று கூடுவர். விதிப்படி அனைவரும் குளத்தை நீந்திக் கடக்க வேண்டும். பிழைப்பவர்கள் வருங்கால அரசனாக தகுதி பெறுவார்கள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு:

சங்கு முழங்க சடங்கு ஆரவாரத்துடன் தொடங்கியது. சரியாக இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போட்டி நிறைவு பெற்றது. சுமார் அறுபது சொச்சம் இளவரசர்கள் குளத்தை கடந்து வந்திருந்தனர். போட்டியாளர்கள் பட்டியல் (Participants' list) படிக்கப்பட்டது (Roll Call). தங்கள் பெயர் வந்தால் இளவரசர்கள் "உள்ளேன் ஐயா." என்று கூறியபடி களைப்பாரிக்கொண்டிருந்தார்கள். இல்லாதவர்கள் மாண்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள்.

"வாமனன்".
"உள்ளேன் ஐயா." என்றான் வாமனன்.

"கோமகன்".
"உள்ளேன் ஐயா." என்று ப்ராக்ஸீ(Proxy) கொடுத்தான் வாமனன்.

பின் குறிப்பு: கோமகன் அந்தப்புர தோழிகளுடன் நீந்திக் கொண்டிருந்தான். சடங்கு தொடங்கும் முன்பும் ப்ராக்ஸீ(Proxy) விழுந்தந்தை வாசகர்கள் யூகித்திருப்பீர்கள்.