மீசை அவரது அடையாளம் மட்டுமல்ல அவரது பெயரும் கூட.
அவரை எப்பொழுது முதலில் சந்தித்தேன் என்று ஞாபகம் இல்லை. நினைவாற்றல் வரும் முன்பே அறிமுகம் என்று நினைக்கிறேன். மீசைக்கு எவ்வளவு வயது என்று என்னால் இன்றும் யூகிக்க முடியவில்லை. சுமார் எழுபது வயதுடைய தோற்றம். அவருக்கு பூ விழுந்த கண்கள், வெற்றிலைச் சிவப்பான வாய். எஞ்சிய பற்கள் அனைத்தும் கரை படிந்து மஞ்சள் சிவப்பு வர்ணம் பூசியவை. வெற்றிலை பாக்குப் பை இடுப்பில் எப்பொழுதும் உண்டு. அதை நிரப்பி வைத்திருக்கவே அவர் பாடுபடுவதாக தோன்றும்.
அவர் எங்கள் நகரில் உள்ள பல வீடுகளில் குப்பை அள்ளுவதும், பாத்தி கட்டுவதும் , செடிகளை நடுவதும் போன்ற துப்புறவு வேலைகளை செய்து வந்தார். அவரது மனைவி மங்கி சாணி மொழுகுவது, வீடு பெருக்குவது, வாசல் தெளிப்பது போன்ற பணிகளை செய்து வந்தார். என் பாட்டி அவர்கள் இருவரையும் எங்கள் வீட்டின் அங்கமாக நடத்தினார்.
அவர்களது உடைமைகள் எங்கள் வீட்டின் மாடிப்படிகளின் அடியில் இருக்கும்.
ஒரு பழைய தழும்புகள் விழுந்த ரப்பர் செருப்பு, பழுப்பு நிறத்தில் ஒரு பை, சோறும் கஞ்சியும் ஏந்த தோதான ஒரு பாத்திரம் மற்றும் தண்ணீர் குடிக்க ஒரு ஒடுங்கிய பிளாஸ்டிக் குடுவை. இவ்வளவு தான் அவர்களின் தேவை. காலையிலேயே இருவரும் வந்து விடுவார்கள். எங்கள் நகரை அடைய தினமும் நான்கு கிலோமீட்டர்கள் நடந்து வருவார்கள்.
மீசையின் சொத்து ஒரு கடப்பாரையும் ஒரு மண்வெட்டியும் தான். எங்கள் வீட்டின் தென்னை மரங்களை சீவி சிங்காரித்து அழகு படுத்துவார். சப்போட்டா மரத்திற்கு இயற்கை உரம் கொண்டு வந்து போடுவார். சப்போட்டா பழங்களை திங்க எங்களுக்கும் வவ்வால்களுக்கும் போட்டியே நடக்கும். அவ்வளவு இனிமை. நாள் முழுக்க அசரா நோவும் உழைப்பு.
வீட்டில் நிறைய பூனைகளையும் நாய்களையும் வளர்த்து வந்தோம். துரதிர்ஷ்டவசமாக அவற்றில் சில இறக்கும் பொழுது மீசையை தான் அழைப்போம். அவர் வந்து அவற்றை ஒரு சாக்குபையில் போட்டு காட்டுக்குள் சென்று அடக்கம் செய்வார். வேலையை முடித்த பின்னர் காசுக்காக வீட்டின் வாசலிலேயே மெளனமாக நின்று கிடப்பார். நான் சில சமையங்களில் கவனித்து அப்பாவிடம் கூறுவேன். காசை குனிந்து இரு கரங்களில் பெற்றுக்கொள்வார்.
அவரது செருப்புகள் என்றுமே அவருடைய கால்களை விடப் பெரியதாக தான் இருக்கும். மங்கி அவரது இரண்டாம் மனைவி. அவர்களுக்குள் என்றுமே ஒரு எரிச்சல் கலந்த அன்பு மொய்த்துக்கொண்டே இருக்கும். "யோவ் மீசை. யோவ் மீச. காதும் கேக்காது. இந்தா சோறு. சோறு சோறு தின்னு." என்று மங்கி கத்தி அழைக்க மீசை குந்தி சோற்றை மீசையில் ஓட்ட தின்பார்.
மதியம் சில வேளைகளில் களைப்பாற வீட்டின் முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பார்கள். நான் சில சமயங்களில் இவர்கள் என்னடா எங்கள் தொலைக்காட்சியை பார்ப்பது என்று மறைத்தோ அணைத்தோ விட்டிருக்கிறேன். அதை நினைத்தால் வெட்கிப்போகிறேன். வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்சென்றுவிட்டேன். அவ்வப்பொழுது வீடு வரும் பொழுது மீசையை காண்பதுண்டு. கூன் விழுந்து உயரம் குறைந்து கொண்டே வந்தது. ஆனாலும் அதே வேலைப்பழு அதே கூலி. ஒரு முறை கூட குறை கூறியது நினைவில்லை. என்னைக் காணும் பொழுது "சாமி நல்ல இருக்கீங்களா?" என்று நான் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்பார்.
கடைசியாக அவரை என்று பார்த்தேன் என்று நினைவில்லை. "போய்ட்டு வாரொமுங்க" என்று கூறி விடை பெற்று செல்வார். இப்பொழுது அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அவருக்குரிய மதிப்பையும் மரியாதையும் நானோ சமுதாயமோ அளிக்கவில்லை. பெரிய மீசைக்காரர்களை பார்க்கும் பொழுதெல்லாம் அவர் ஞாபகம்.
நவம்பர் மாதத்தில் மோவெம்பருக்காக (Movember) ஒவ்வொரு ஆண்டும் மீசை வளர்க்கிறேன், ஆண்கள் ஆரோக்கிய விழிப்புணர்வுக்காக அல்ல, மீசைக்காக.

No comments:
Post a Comment