Monday, June 14, 2010

தட்டி விலாஸ்

தட்டி விலாஸில் எப்பொழுது சாப்பிட ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. உலகத்திலேயே என் அம்மா சமையலுக்கு பிறகு நான் விரும்பி சாப்பிட்டது தட்டி விலாஸில் தான். அதை நடத்திக் கொண்டிருந்தது கன்னடம் பேசும் ஒரு கூட்டு குடும்பம். அவர்கள் உணவகத்திற்கு பெயர் சூட்டவில்லை. 'தட்டி விலாஸ்' என்பது நாங்கள் சூட்டிய பெயர். அறுபதில் இருந்து எழுபது வயதிற்குள் இருக்கும் தம்பதியர், அவர்களின் மூன்று பெண்பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண்பிள்ளை என கூட்டமான குடும்பம் அது. இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகி பிள்ளைகளும் இருந்தனர். மூத்த பெண் திருமணம் ஆன பின்பு மாப்பிள்ளை வீட்டில் குடிபெயர்ந்து விட்டாள். இரண்டாவது பெண் தன் கணவருடன் தட்டி விலாஸில் தான் வசித்து வந்தாள். இளைய மகன் எங்கோ வேலை செய்து கொண்டிருந்தான். இவர்கள் அனைவரையும் விட மிக முக்கியமானவர் மூன்றாவது பெண்ணாகிய சியாமளா அக்கா. இவர்களுடன் ஒரு பூனை, நான்கைந்து ஆடுகள் மற்றும் கோழிகளும் வசித்து வந்தன.





அவர்களை பற்றி மேலும் காணும் முன் தட்டி விலாசை சற்று காண்போம். தென்னங்கீற்றால் கான்க்ரீட் சுவரின் மீது எழுப்பப்பட்ட கூரை. தரை முழுவதும் மாட்டு சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். ஆங்காங்கே தரையில் மர மேசைகளும், இருக்கைகளும் பதிக்கப் பட்டிருக்கும். முன் சுவற்றில் சதுர வடிவில் ஒரு நுழைவாயில். கதவு கிடையாது. இரவு உறங்கும்முன் வாயிலை துணியால் மூடிக்கொள்வார்கள். உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கம் தேநீர், காபி போட வசதியாக மேசை, அதன் மீது ஒரு குமுட்டி அடுப்பு, கண்ணாடி டம்ளர்கள், வடிகட்டி மற்றும் பாத்திரம் கழுவ தோதான மூலை. மூத்தவர் அப்பாதான் அதன் பொறுப்பாளர். சற்று முன் நகர்ந்தால் கண்ணாடி மற்றும் அடுக்குகள் பொருத்தப்பட்ட மேசை. அதன் மீது அடுக்கடுக்காக வாழை இலைகள், பார்சல் கட்ட தேவை படும் காகிதங்கள், பாலிதீன் பைகள் மற்றும் நூல்கண்டு. பார்சல் காகிதங்கள் பெரும்பாலும் தினதந்தியாக இருக்கும். அவர்கள் தினத்தந்தியை தினமும் வாசிக்கவும், பார்சல் கட்டவும் உபயோகிப்பார்கள். கூடவே கல்லாப்பொட்டியும் இருக்கும். இதன் பொறுப்பாளர் சியாமளா அக்கா தான். வேறு யாரும் நெருங்க மாட்டார்கள். அதை தொடர்ந்து சாப்பிட உட்கார மேசைகள் மற்றும் நாற்காலிகள். மேலும் முன் சென்றால் நுழைவாயிலுடன் ஒரு தடுப்புச் சுவர். அதன் ஊடே இரண்டு சிறிய அறைகள். முதல் அறையில் சமையல் வேலை நடக்கும். சமைக்க பெரும்பாலும் விறகுகளையே பயன்படுத்துவார்கள். இரண்டாம் அறையில் தான் அனைவரும் உறங்குவார்கள். ஒரு தொலைகாட்சிப் பெட்டியும் அங்கு துணைக்கு இருந்தது.

எந்த இடத்தில் உட்கார்ந்து பார்த்தாலும் தெரிகிற மாதிரி, உணவு அட்டை நுழைவாயிலிற்கு அருகே தோதான இடத்தில் மாட்டப்பட்டிருக்கும். இட்லி 1.50, தோசை 4, வெங்காய ஊத்தாப்பம் 5.50, ஆம்லெட் 3, அளவு சாப்பாடு 14, தேநீர் 2, காபி 3, பால் 3. இது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு. நாங்கள் வசித்த பகுதி நகரத்திற்கு அப்பால் இருந்ததால் மக்கள் குறைவாகவே தென்படுவர். தட்டி விலாஸ் தான் எங்கள் பகுதியின் பிரதான மையம். உணவகத்திற்கு அனைத்து வித மக்களும் வந்து போவார்கள். நிறைய விசுவாசிகளும் உண்டு, நான் உள்பட. குறிப்பாக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள். காலை ஏழு மணி முதலே இவர்கள் வர தொடங்கிவிடுவார்கள். சியாமளா அக்காதான் அனைவருக்கும் இலை போடுவாள், பரிமாறுவாள், கணக்கெழுதுவாள். சமைப்பது இரண்டாவது பெண் மற்றும் அம்மா. சியாமளா அக்கா சலிக்காமல் அனைவரிடமும் அன்பாக பேசி, பறவையாக பறந்து வேலை செய்வாள். சட்டை, பாவாடை அணிந்திருப்பாள். எண்ணெய் தடவி வழித்து வாரி பின்னப்பட்ட குறைவான தலைமுடி. எவ்வளவு பேர் வந்தாலும், யார் என்ன வாங்கினார்கள் என சரியாக ஞாபகம் வைத்து கணக்கும் போட்டு கச்சிதமாக வியாபாரம் செய்வாள். அவர்கள் ஏழைகளாக இருந்து, குடும்பத்தின் கூட்டு முயற்சியால் ஓரளவுக்கு முன்னேரி இருந்தார்கள். இரவு நேரங்களில் குடிகாரர்களும் வருவார்கள். சிலர் வாயிலெடுத்தும் பார்த்திருக்கிறேன். முகம் சுழிக்காமல் வேலை செய்வாள் சியாமளா அக்கா.



நானும் என் தங்கையும் அடிக்கடி அங்கு சாப்பிட செல்வோம். இருபது ரூபாயில் இருவரும் வயிறு முட்ட தின்றுவிடுவோம். முதலில் ஆவி பறக்க நான்கு இட்லி வாங்குவேன். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் தக்காளி சட்னி. சியாமளா அக்கா தான் ஊற்றுவார். அதிகமும் ஆகாமல், குறையவும் அல்லாமல் சரியாக அளந்து ஊற்றுவார். அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. கட கடவென விழுங்கி விடுவேன். எப்படித்தான் செய்வார்களோ. பின்னர் இரண்டு தோசைகள். முறுகலாக நேர்த்தியாக சுடப்படிருக்கும். சொர்க்கத்தை சுவைத்தது போல உணர்வேன். பின்னர் அம்மா, அப்பாவிற்கு பார்சல் கட்டிக்கொண்டு அடுத்தது எப்போ வரலாம் என்று யோசனை செய்து கொண்டே விடை பெறுவோம். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மதியம் சாப்பாடு தட்டி விலாஸில் தான். அவர்களின் ரசத்திற்கு ஈடு இணையே கிடையாது. அப்பளம் கூட அமிர்தமாக இருக்கும்.




விடுமுறை நாட்களில், இரவு வேளைகளில் நண்பர்களுடன் தட்டி விலாஸில் ஒரு முறையும், வீட்டில் ஒரு முறையுமாக மாய பஜார் ரங்காராவ் போல வெளுத்து கட்டுவேன். எந்த நல்ல விஷயமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும் என்பது இயற்கையின் நியதி போலும். தட்டி விலாஸும் ஒரு நாள் மூடப்பட்டது. சியாமளா அக்கா திருமணம் செய்து கொண்டதாக சிலர் கூறினர். அவர்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டதாக கேள்விப் பட்டேன். மிகவும் வருந்தினேன். என் வாழ்வில் எதையோ இழந்ததை போல உணர்ந்தேன். அவர்களுக்கு பின்னர் எங்கள் பகுதியில் பல உணவகங்கள் வந்து சென்றன. ஒன்று கூட தட்டி விலாஸ் தந்த உணர்வை, சுவையை தரவில்லை.

காலம் சென்றது. நானும் வேலைக்காக பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். இரண்டாவது முறையாக ஒரு கன்னட உணவகத்தில் சாப்பிட்டேன். சாம்பார் இனித்தது, இட்லி கசந்தது. சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு தட்டி விலாஸின் ஞாபகம் மீண்டும் மீண்டும் வந்தது, இன்றும் வருகிறது.

1 comment:

சதுக்க பூதம். (Downtown Demigod) said...

எனக்கு இப்போ பசிக்குது.. நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது..attention is paid to minute details as well..