Saturday, June 12, 2010

அறியா(மை)


"என்னடா சோகமா இருக்க?" என்று கேட்டுக் கொண்டே கோல்டு பில்டர் சிகரெட்டை பற்ற வைத்தான் மணி. எட்டாம் வகுப்பிலிருந்தே புகை பிடிக்க அரம்பித்துவிட்டிருந்தான்.

அன்று என் ஆயிரம் ருபாய் விலைமதிப்புள்ள கால்குலேட்டரை தொலைத்திருந்தேன். வீட்டில் சொன்னால் மரண அடி விழும். செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தேன்.

"கால்குலேட்டர் காணாம போச்சுடா."

"எப்டிடா தொலைச்ச?"

"பஸ்ல பேக்ல இருந்து எவனோ உருவிட்டான்னு நெனக்கறேன்."

"ஆமா நீ அனிதாவையே பாத்துட்டு இருந்திருப்பே. உன் சட்ட பேன்ட உருவிருந்தா கூட உனக்கு தெரிஞ்சிருக்காது."

"நானே கடுப்புல இருக்கேன். நீ வேற ஏன்டா."

"சரி விடு மச்சி. இதுக்கு போய் கவலை படற. ஈசியா கண்டுபிடிச்சரலாம். தம் வேணுமா?" என்று வழக்கம் போல் கேட்டான் மணி.

"செருப்படி வாங்கி குடுக்காம விட மாட்ட போல. தம் அடிச்சா எங்க வீட்டு நாயே கண்டுபுடிச்சுரும்." என்று நானும் வழக்கம் போல் சிகரெட்டை தவிர்த்தேன்.

"மணி அது எப்டிடா ஈசியா கால்குலேட்டர கண்டுபிடிக்கறது? பேசாம போலீஸ் கம்ப்ளைண்டு குடுத்துரலாமா?"

"இது உனக்கே ஓவரா தெரில?" என்று காரப்பார்வை பார்த்தான் மணி.

"வேற வழி இருக்கா. வீட்ல தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க."

"எனக்கு தெரிஞ்ச ஒரு ஆளு மதுக்கரைல இருக்காரு. ஒரு நூறு ரூபா குடுத்தா கல்குலேட்டர் இருக்கற எடத்த புட்டு புட்டு வெச்சுருவார். "

"யாருடா அந்த மகான். ஆமா அது சரி, நான் நூறு ரூபாக்கு எங்க போவேன்?"

"இருக்கவே இருக்கான் நம்ம தரணி. அவன் கிட்ட வாங்கிக்குவோம். அப்பறமா சேத்து வெச்சு குடுத்திரலாம்." என்று மறுக்க முடியாத ஒரு யோசனையை கூறினான் மணி.

"அதுவும் சரி தான். எப்டி அந்த ஆளு கண்டுபிடிச்சு குடுப்பாரு? அவரு பெரிய மாபியாவா?"

"அதெல்லாம் உனக்கு எதுக்கு. இப்போ கிளம்பு. நம்ம மதுக்கரைக்கு போலாம். நீயே நேர்ல பாத்துக்கோ."

ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பிறகு மதுக்கரை சென்றடைந்தோம். சிமென்ட் தொழிற்சாலைகள் நிரம்பி வழியும் பகுதி. நகரத்திற்கு அப்பால் இருந்தமையால் அந்த சுற்றுவட்டாரமே வெறுச்சோடி கிடந்தது. தூசு படிந்த காற்று. இதமான வெய்யில். தொய்வில்லாமல் நடக்கலானோம். ஒரு கிலோமீட்டர் நடந்த பின்னர் சில வீடுகள் தென்பட்டன. மணி ஒரு வீட்டை நோக்கி நடந்தான். நான் பின்தொடர்ந்தேன்.

ஒரு எளிமையான வீடு. முட்களால் ஆன வேலி. ஒரு சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம். வெளிப்புறத்தே பல வகை செடிகள் இருந்தன. திருஷ்டி பூசணிக்காய் மாடி மேல் இருந்து சிரித்தது. முன்கதவின் மேலே ஒரு வாஸ்து இயந்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்ததும் லேசாக பயம் ஒட்டிக்கொண்டது.

"நீ இங்கயே இரு. நான் உள்ள போய் பேசிட்டு வரேன்." என்று தனியே விட்டு விட்டு போனான் மணி.

சிறிது நேரம் கழித்து மணி உள்ளிருந்து அழைத்தான். யார் இந்த ஆள்?. எப்படி என் பொருளை கண்டுபிடிப்பான் என்று வழி நெடுக நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மணியையும் பல முறை கேட்டு விட்டேன். அவன் பதில் கூற மறுத்து விட்டான்.

உள்ளே சென்றேன். அறைகள் முழுவதுமாய் சாமி படங்கள். ஒரே புகை மூட்டமாய் இருந்தது. ஒரு பாய் விரித்திருந்தது.

"உக்காருங்க. ஐயா இப்போ வந்திருவாரு" என்று ஒரு நடுத்தர வயது ஆசாமி திடிரென்று தோன்றி கூறினான்.

நாங்கள் அமர்ந்தோம். தண்ணீர் குடுத்தான் அந்த ஆசாமி. நடந்த களைப்பில் நிறையாவே குடித்தேன்.
குடித்த பின்பு தான் கவனித்தேன். தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. லேசாக உப்புக் கரித்தது.

"என்னதுங்க இது?" என்றேன்.

"கோமியம். ஒடம்புக்கு ரொம்ப நல்லது." என்று இளித்தான் அந்த எடுபிடி. எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. பாக்கெட்டில் இருந்த இரண்டு தேன் மிட்டாய்களை வாயில் போட்டுக்கொண்டு சமாளித்தேன்.

"இப்போவாவது சொல்லுடா. இந்த ஆளு பெரிய திருடனா? நிறைய கனெக்சன் வெச்சிருக்கானா? அப்டி இருந்தாலும் ஒரு கல்குலேட்டர கண்டுபிடிக்கறது ரொம்ப சிரமம் ஆச்சே?"

"பேசாம இருடா. சாமி வந்துட்டாரு"

"என்னது சாமியா. என்ன சொல்ற. எங்க இருக்காரு?"

"அங்க பாரு வர்றாரு."

தமிழ் சினிமா கதாநாயகி போல புகை சூழ பின் வாசல் வழியாக மூன்றடி உயரத்தில் ஒரு அரைக்கிழவன் வந்தான். அவனை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயை பொத்தி சிரமப்பட்டு சிரிப்பை அடைத்தேன்.

"ஏன் சிரிக்கற. அவரு எவளோ பெரிய ஆளு தெரியுமா. உன் கால்குலேட்டர் எங்க இருக்குனு அவரு சொல்லலேன்னா என் பேர மாத்திக்கரேண்டா." என்று மணி என் காதுக்குள் கிசுகிசுத்தான்.

"என்ன தம்பி என்ன பிரச்சன?" என்றார் சாமி.

இம்முறை வாய்விட்டு பலமாக சிரித்தேன். பின்னே பெண் குரலில் பேசினால் யாருக்கு தான் சிரிப்பு வராது. மணி என்னை முறைக்க சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சித்து இரண்டு முறை இடைவெளி விட்டு சிரித்து முடித்தேன். சாமி இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

"சாமி இவனோட கால்குலேட்டர காணோம். நீங்க தான் எப்டியாவது கண்டுபிடிச்சுக் குடுக்கணும்."
என்றான் மணி.

"காணிக்கை கொண்டு வந்திருக்கீங்களா?"

ஆம் என்று தலை ஆட்டினோம்.

"இந்த தட்ல போடுங்க." என்றார் சாமி. முழுதாக நூறு ரூபாயை போட்டோம்.

"கால்குலேட்டர் தானே இப்பவே எங்க இருக்குனு பாத்துடலாம்." என்று கூறிக்கொண்டே ஒரு வெற்றிலையை எடுத்தார் சாமி. கூடவே நின்று கொண்டிருந்த எடுபிடி மை டப்பாவை நீட்டினான்.

வெற்றிலையில் மையை தடவி வாயில் ஏதோ முணுமுணுத்தார் சாமி. எனக்கு நூறு ருபாய் அம்பேல் என்று உறுதியாக தெரிந்துவிட்டது.

"சாமி எதாவது தெரியுதுங்களா." என்றான் மணி ஆவலுடன்.

"ஒரு நிமிஷம்." என மீண்டும் முணுமுணுத்தார் சாமி. ஏதோ ஜக்கம்மா மந்திரம் போல கேட்டது.

"இப்போ பொருள் சேலத்துல இருக்கு. சரியா சொல்லனும்னா சேலத்த தாண்டி தர்மபுரி நோக்கி போய்ட்டு இருக்கு."

"என்னடா இந்த ஆளு பஸ் ரூட்டெல்லாம் சொல்றான்." என்றேன்.

"சும்மா இருடா. என்னதான்னு கேப்போமே. சாமி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க."

"நீங்க தேடற பொருள் தர்மபுரிய நோக்கி போய்ட்டு இருக்கு. திருடன் பஸ்ல போய்ட்டு இருக்கான்னு நெனக்கறேன். இதுக்கு மேல தொறத்தி பிடிக்கறது ரொம்ப கஷ்டம். உள்ளூர்ல இருந்தா சுலபமா மடக்கி புடிச்சிருக்கலாம். உங்க கெட்ட நேரம். கெடைக்கறது ரொம்ப கஷ்டம்." என்று புன்னகையுடன் கூறினார் சாமி.

"இந்த ஆளுக்கு நல்ல நேரம். நல்ல ஆளுகிட்ட கூட்டிட்டு வந்தடா. இத முன்னாடியே சொல்லிருந்தா வந்தே இருக்க மாட்டேன். இப்போ இன்னொரு நூறு ரூபாயும் போச்சு." என்று மணியை திட்டினேன்.

"ஜிபிஎஸ் (GPS) எல்லாம் இந்த ஆளு முன்னாடி ஒண்ணுமே இல்ல. வெத்தலைலையே மேப்பு போடறான். ஏன்டா நீ இவன பத்தி முன்னாடியே சொல்லல? " என்று நான் கடுகடுத்தேன்.

"பரம ரகசியம்னு சாமி சொன்னாரு. மின்னாடியே வெத்தல மேட்டர சொன்னா மந்திரம் பலிக்காதுன்னு போன தடவ வந்த போது சொன்னாரு. " என்றான் மணி.

"அடப்பாவி நீ அடிக்கடி வந்து போற எடமா இது. படிச்சவன் தானடா நீ."
மணி வெட்கித் தலை குனிந்தான்.

"தம்பிங்களா மணி ஆறாகப் போகுது. நான் ஜகன் மோகினி யாகம் செய்யணும். கொஞ்சம் சீக்கரம் எடத்த காலி பண்ணுங்க." என்றான் அந்த பித்தலாட்டக்காரன்
.
சிரித்துக்கொண்டே "ரொம்ப நன்றிங்க. அப்போ நாங்க கிளம்போரங்க." என்று கூறி ஒரு வழியாக இடத்தை காலி செய்தோம்.

மணியை அன்று திட்டியது போல் நான் இது வரை யாரையும் திட்டியது இல்லை. கால்குலேட்டர் தொலைந்ததை வீட்டில் இன்று வரை சொல்லவில்லை. சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து மணி தொலைபேசியில் அழைத்தான்.

"டேய் மச்சான் என் ஆள நாலு நாளா காணோம். வீடு கூட பூட்டிருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரில."

"நீ அங்கேயே இரு. நான் உடனே வரேன். மதுக்கரைக்கு போலாம்." என்று நான் கூறியதும் மணி இணைப்பை துண்டித்து விட்டான். உள்ளுக்குள் மிதமாக நகைத்துக்கொண்டேன்.

1 comment:

Vish said...

Amazing.. Problem is even when we understand we are fooled, we cannot say a word. It would amuse more.

Amazing punch machi. Esp. the GPS and Jaganmohini yagam