
கிரேஹௌண்ட் (Greyhound), வட அமெரிக்காவின் மிகப் பெரிய போக்குவரத்து நிறுவனம். சுமார் 2300 நகரங்களை இணைக்கும் பேருந்து சேவை அளிக்கும் நிறுவனம். அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல கிரேஹௌண்டை இரண்டு காரணங்களுக்காக தேர்வு செய்தேன். ஒன்று, குறைந்த கட்டணம். இரண்டு, வேறு வழி இல்லை.
பத்து மணிக்கு புறப்படும் பேருந்தை பிடிக்க ஒன்பது மணிக்கெல்லாம் ஆஜர் ஆகும் படி பயணச்சீட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். நேரத்தை கடை பிடிப்பதில் ஜெர்மானியர்களைப் போல இருக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக் கொண்ட கட்டளையின் பேரில் எட்டே முக்காலுக்கு ஆஜர் ஆனேன். பயணச்சீட்டை காண்பித்து போர்டிங் பாஸும் வாங்கி ஆகி விட்டது. பேருந்து புறப்பட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருக்கிறதே என்று கையில் இருந்த 'Surely you are joking Mr. Feynman' புத்தகத்தை ஐந்தாவது முறையாக படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகத்தை முதல் முறை வாசித்த பொழுதே எனது அங்கங்களுக்குள் ஒன்றாகி விட்டிருந்தது. புத்தகங்களை இரவல் குடுக்கும் விஷயத்தில் நான் மகா கஞ்சன். என்னிடம் ஏழைகள் யாரும் இரவல் கேட்பதில்லை. கேட்பவர்கள் அனைவரும் குறைந்தது இருபது ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் கணிப்பொறி கிராக்கிகள் தான்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். மேற்கூறிய கஞ்சத்தனத்தால் தான் இந்த புத்தகம் ஐந்து ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த பொழுது கவனம் சிதறிக் கொண்டே இருந்தது. காரணம் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். மக்களில் தொண்ணூறு சதவிகிதம் ஆப்ரிக்க அமெரிக்கர்கள். இனவாதத்தை அடியோடு வெறுப்பவன் நான். ஆயினும் அவர்களை பார்க்க பார்க்க உள்ளே ஒரு வித பயம் மேலும் கீழும் உருண்டது. உயிர் மேல் ஆசை இருந்தால் கருப்பர்கள் என்ன கேட்டாலும் கொடுத்து விடு என்று நண்பர்கள் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.
எனது பயத்தை நினைத்து வெட்கினேன். ஆனால் அந்த உணர்வை அடக்க முடியவில்லை. கட்டுப்படுத்த முடியாத இனவாத உணர்வு. பயணிகள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. அனைவரும் சாதாரண உடை அணிந்திருந்தார்கள். சிலர் மங்கிய உடை அணிந்திருந்தார்கள். அமெரிக்காவில் சாதரணமாக காணப்படும் ஆடம்பரம் அவர்களிடம் இல்லை. நிறைய பேர் புகைப் பிடித்தனர். ஒருவன் நெருப்பு இருக்கிறதா என்று என்னிடம் கேட்டான். நான் இல்லை என்று தலை ஆட்ட முறைத்துக் கொண்டே விலகிச் சென்றான். அனைவரும் கார் இல்லாத ஏழைகள் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டேன்.
ஏன் இவர்களில் நிறைய பேர் ஏழையாக இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுந்தது. அவர்கள் வளரும் சூழல் ஒரு மிகப் பெரிய காரணமோ?. சுற்றிலும் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பின் ஒருவன் படிக்க செல்வது முடியாத காரியம். ஏன் நிறைய பேர் திருடுகிறார்கள்?
'A Scanner Darkly' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் நினைவிற்கு வந்தது.
'சக்கரை வியாதி உள்ள ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் உயிர் வாழ இன்சுலின் வாங்கியே ஆக வேண்டும். அவனிடம் காசு இல்லை என்றால் என்ன செய்வான்? அடுத்தவனிடம் இருந்து பிடுங்கியாவது இன்சுலின் வாங்க நினைப்பான்'.
மறுக்கப் பட்டவர்கள் மடிவார்கள் அல்லது உலகத்திடம் இருந்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆய்த எழுத்து திரைப்படத்தில் இன்பா கூறும் ஒரு வசனம், 'இந்த உலகம் எனக்கு எதுவுமே குடுக்கல. எல்லாமே நானா புடுங்கி எடுத்து கிட்டது தான்.' ஏன் இவர்கள் மறுக்கப் படுகிறார்கள்? இந்த கேள்விக்கு ஓராயிரம் பதில்கள் இருக்கலாம். எனக்கு சரியான காரணம் தெரிய வில்லை.
மணி பத்தாகி விட்டிருந்தது. தோதான இருக்கையாக தேடித் பிடித்து அமர்ந்தேன். புத்தகத்தில் ஆழ்ந்தேன். ஒரு மணி நேரப் பயணத்திற்கு பிறகு பேருந்து ஒரு இடத்தில் நிறுத்தப் பட்டது. அனைவரும் இறங்கிப் போனார்கள் என்னைத் தவிர. என் பையில் மடிக்கணினி மற்றும் உடைகள் வைத்திருந்தேன். அவற்றை விட்டு விட்டு போக மனம் இல்லை. வந்த சிறுநீரை அடக்கிக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம் தான். பின் போய்க் கொள்ளலாம் என்கிற ஆறுதல்.
அப்பொழுது ஒருவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். அவசரமாக ஒருவரை அழைக்க வேண்டும் என்று எனது கைப்பேசியை கேட்டான். வேறு வழி இல்லாமல் எனது கைப்பேசியை கொடுத்தேன். வாங்கியவன் சிக்னல் சரியில்லை என்று கூறி கிழே இறங்கி சென்றுவிட்டான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இறங்கி அவனை பின் தொடரலாமா? பையில் கணினி வேறு இருக்கிறது. அதையும் எடுத்துச் செல்லலாமா? கைப்பேசி போயே போச்சா? ஐயையோ பேருந்தை இப்பொழுது எடுத்து விடுவானே. ஓட்டுனர் கூட வந்தாயிற்றே. இதயம் பட படக்க செய்வதறியாது முழித்தேன். பேருந்தும் எடுத்தாகிவிட்டது. கிளம்பும் வேளையில் ஆசாமி திரும்பி வந்துவிட்டான். நன்றி கூறி கைப்பேசியை திரும்ப கொடுத்து விட்டான்.
அவனை நம்ப மறுத்ததற்காக மனம் வருந்தினேன். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சேருமிடம் வந்தடைந்தேன். மூன்று மணி நேரமாக என் கணினியை வெளியே எடுக்க நினைத்து எடுக்கவே இல்லை. பயந்து பயந்து ஒரு வழியாக வந்தாயிற்று. அழைத்து செல்ல வந்த நண்பன் பயணத்தைப் பற்றி விசாரித்தான். அவனது ஒரு பயம் நிறைந்த கிரேஹௌன்ட் பயணத்தை நினைவு கூர்ந்தான். தனி மரம் அல்ல ஒரு தோப்பே என் உணர்வுகளை பகிர்கிறது போலும். அந்த நிகழ்வுக்கு பிறகு இரண்டு முறை கிரேஹௌண்டில் பயணம் செய்து விட்டேன். ஆயினும் ஆப்ரிக்க அமெரிக்கர்களை கண்டால் ஒரு வித பயம் ஏற்படுவது தொடர்கிறது. அதை உணரும் போதெல்லாம் வெட்கித் தலைகுனிகிறேன். இந்த பயம் கலந்த இனவாத உணர்வை என்னால் வெல்ல முடியாததை நினைத்து வருந்துகிறேன். நிச்சயம் என்னை மாற்றிக்கொள்வேன்.
5 comments:
enjoyed reading...agree with you on that fear.once again nice narration in tamil!
romba nalla eruku!..
great arun. i was feeling guilty for not reading your blog so far.
v.nice narrationd da. enjoyed reading. we can even make a short film
Guys thanks for the comments. You guys constantly motivate me :)
Post a Comment